நோக்கம்:
மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் விருப்பமுடன் செயல் படுவதற்கான பல்வேறு வாய்ப்புகளை வழங்குகின்ற மொழி வகுப்பில், உற்று நோக்கல் என்கிற செயல்பாடு எவ்வாறு மாணவர்களின் கற்றல் – கற்பித்தல் செயல்பாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதின் அனுபவப்பகிர்வு.
உற்று நோக்கல்:
குழந்தைகள் இயல்பிலேயே எல்லாவற்றையும் உற்று நோக்கி, மொழியின் மூலமாக வெளிப்படுத்தும் திறன் பெற்றவர்கள். குழந்தைகளுக்கு இருக்கிற இந்தத் திறனின் மூலம் குழந்தைகளை ஆர்வமுடன் மொழி வகுப்பில் பங்கேற்க செய்ய முடியும் என உறுதியாக நம்பினேன். பாடத்தில் இருக்கிற படங்களை மாணவர்களிடம் காண்பிக்கும் போது மாணவர்கள் படங்களை உற்றுநோக்கி படத்தைப் பற்றிய விளக்கங்களைத் தகவல்களாகக் கூறினர். படத்தைப் பற்றிய மாணவர்களின் விளக்கங்கள் அவர்களின் கற்பனைத் திறனை வெளிப்படுத்துகிற வகையிலும் அமைந்தது. மாணவர்களின் கருத்துக்களைப் பாடத்தோடு இணைக்கிற வகையில் வினா எழுப்பிய பொழுது மாணவர்களின் பேச்சுத்திறனும், எடுத்துரைக்கும் திறனும் சிறப்பாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தது.
கற்றல் திருவிழாவும் உற்று நோக்கலும்:
புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக நடந்த கற்றல் திருவிழா, மாணவர்களின் கற்றல் – கற்பித்தல் செயல்பாட்டில் பல நிலைகளில் உதவி புரிவதற்காக மேற்கொண்ட ஒரு முயற்சியாகும். இந்த நிகழ்வில் எம் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். அவர்களின் உற்றுநோக்கல் திறனைக் கண்டறியும் வகையில் மாணவர்களிடம் அவர்கள் பார்த்த நிகழ்வுகள் குறித்து விளக்கிச் சொல்லச் சொன்னேன். தாங்கள் உற்றுநோக்கிய நிகழ்வுகளை, தகவல்களாக மாணவர்கள் அழகாக எடுத்துரைத்தார்கள். சில இடங்களில் நான் புதிய சொற்களை அறிமுகப்படுத்தியும் அவர்களின் பேசும் திறனை ஊக்குவித்தேன். இதன் மூலமாக மாணவர்களின் உரையாடும் திறன் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளதை அறிந்து கொள்ள முடிந்தது.
முடிவுரை:
மாணவர்களுக்கு இயல்பாகவே இருக்கிற உற்றுநோக்கல் திறனை கற்றல் – கற்பித்தல் செயல்பாட்டில் பயன்படுத்தும் போதும் பாடத்தோடு இணைத்துப் பயன்படுத்தும் போதும் மாணவர்களின் பேசும் திறன் வளர்வதோடு கற்றலும் இனிமையாகிறது.... நிறைவடைகிறது.
Author: ஷாலினி, அ.தொ.ப, சவரிராயலு நாயக்கர் தொடக்கப்பள்ளி, புதுச்சேரி.
Term: Term 3
- Log in or register to post comments