Towards a just, equitable, humane and sustainable society

தமிழ் மொழிப்பாடம் கற்பித்தலில் விளையாட்டுக்கள் மற்றும் செயலியின் பயன்பாடு (Mobile App)

0
No votes yet
0
Post a comment

சிறப்பம்சங்கள்

  • தமிழ் மொழிப் பாடம் கற்பதில் மாணவர்கள் சந்திக்கும் சவால்கள்.
  • அச்சவால்களை எதிர்கொள்ள ஆசிரியர்கள் எடுத்த  சில உத்திகள்.
  • மொழி கற்றலில் தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துதல்.

இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை, தொடக்க நிலை வகுப்பு மாணவர்களின் படித்தல் திறனையும் எழுதுதல் திறனையும் மேம்படுத்துவதேயாகும்.

மாணவர்களுக்கு எழுத்துக்களையும் உச்சரிப்புகளையும் பல முறை கற்பித்தாலும் அவர்கள் எழுதும் பொழுது பிழையாக எழுதுவதைக் காண்கிறோம்.  தமிழ்ப்பாடத்தில் ஒரு பாடலையோ, சொல்லையோ வாய்மொழியாகச் சொல்லும் போது மிகச்சரியாக சொல்லும் மாணவர்கள் அதை எழுதும் போது பல்வேறு பிழைகளுடன் எழுதுகின்றனர்.  இந்த நிலைப்பாடு தொடக்கநிலை வகுப்பு மாணவர்கள் முதல் 6,7,8 வகுப்பு மாணவர்களிடமும் காணமுடிகிறது. விளையாட்டுக்கள் மூலம் பல்வேறு பயிற்சிகளைச் செயலியின் வாயிலாகவும் மாணவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் பிழையில்லாமல் உச்சரிக்கவும் எழுதவும் செய்கின்றனர்.

தமிழ்க்கற்றலில் எதிர் கொள்ளும் சவால்கள் :

1.     ஒரு சொல்லையோ, பாடலையோ ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பொழுது கற்கும் மாணவர்கள் அவற்றை மனப்பாடம் செய்து வாய்மொழியாகச் சொல்கின்றனர். ஆனால் அதைப் பார்க்காமல் எழுதச் சொல்லும் போது சரியாக எழுதத் தெரியாமல் தடுமாறுகின்றனர்.

2.    வரி வடிவத்தை சரிவர எழுதிப் படிக்காதது மற்றொரு காரணம்.

3.    எழுதும் பொழுது எழுத்துக்களைச் சொல்லிக் கொண்டு எழுதாமல் இருப்பதும் மனதில் எழுத்துக்கள் பதியாமல் இருப்பதற்குக் காரணமாக அமைகின்றது.

4.    ஆர்வமில்லாமல் இருப்பதும் முறையான எழுத்துப்பயிற்சி பெறாததும் காரணமாக அமைகின்றது.

5. மாணவர்கள் மனப்பாடம் செய்வதைத் தவிர்க்க எழுத்துக்களை நினைவில் கொள்ள எழுத்துக்களை எழுதுவதற்கும், உச்சரிப்பதற்கும் பயிற்சி அளித்தல்.

சிக்கலுக்கானப் படிநிலைகள்

எழுத்துக்களின் வரி வடிவம் :

இதுபோன்ற எழுத்துக்களை உடைய மின்னட்டைகளைத் தயாரித்து அவற்றைக் கொண்டு பயிற்சி அளித்தல்.

3.குறில் நெடில் வேறுபாடு அறிதல் :

எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்காதற்கும் குறில் நெடில் வேறுபாடு தெரியாததும் காரணமாக அமைகின்றது குறில் நெடில் ஓசையுடைய எழுத்துக்களை வரிசைப்படுத்துதல், ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு வரி வடிவத்தைத் தனித்து அடையாளம் காணுதல்.

    குறில்    நெடில்

    கெ    கே

    பெ    பே    

இது போன்ற எழுத்துக்களை எழுதி பயிற்சி அளித்தல். மேலும் எழுத்துப் பயிற்சி அட்டைகளைக் கொடுத்தும் பயிற்சி அளித்தல். இதனால், குறில் நெடில் எழுத்துக்களை அறிவதோடு அதனை உச்சரிக்கவும் அறிந்து கொள்வர்..

குழு விளையாட்டு - உச்சரிப்புப் பயிற்சி

ஒற்றைக் கொம்பைப் பயன்படுத்தி வரும் எழுத்துக்கள் குறுகிய ஓசை உடையதாக வரும், இரட்டைக் கொம்பைப் பயன்படுத்தி வரும் எழுத்துக்கள் நீண்ட ஓசையைக் கொண்டு இருக்கும் என்று விளக்கிவிட்டு குறில், நெடில் எழுத்துக்களை உச்சரிக்கும் பயிற்சி அளித்தல்.  குழுவிற்கு 4 பேர் வீதம் 5 குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியே குறில் நெடில் ஓசையுடைய சொற்களைக் கொடுத்து உச்சரிக்க வைத்து  விளையாடுதல்.

வாக்கியம் அமைக்கும் விளையாட்டு

குழுவிற்கு 4 மாணவர்கள் வீதம் 5 குழுக்களாக அமர வைத்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, சுழிகள் எல்லாம் வருவது மாதிரியான வாக்கியத்தைக் கொடுத்து விட வேண்டும். வாக்கியத்தை அமைப்பதற்கு தனித்தனி எழுத்துக்கள் அடங்கிய துண்டு அட்டைகளைக் கொடுத்துவிட வேண்டும். பின்னர், கொடுத்த வாக்கியத்தை எழுத்து அட்டைகளை வைத்து அமைத்துக் காட்டச் சொல்ல வேண்டும்.  அப்பொழுது மாணவர்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் அந்த எழுத்துத் துண்டு அட்டைகளில் எழுத்துக்களைத் தேடி தேடி வாக்கியங்களை அமைக்கும் பொழுது தவறில்லாமல் வாக்கியம் அமைக்கின்றனர்.  அதோடு மட்டுமில்லாமல் ஒற்றைக்கொம்பு இரட்டைக் கொம்பு வேறுபாடும் நன்கு அறிந்து கொள்கின்றனர்.

சொல்வதை எழுதுதல்:

சொல்வதை எழுதுதல் பயிற்சியின் வாயிலாக மாணவர்களின் எழுதுதல் திறனும், நினைவாற்றலும் நன்கு மேம்படும்.  வாய்மொழியாக சரியாகச் சொல்கின்ற மாணவர்கள் எழுதும் பொழுது பிழையோடு எழுதுவதைக் காண்கிறோம்.  வகுப்பில் தினமும் 15 நிமிடம் சொல்வதை எழுதுதல் பயிற்சி அளிப்பதன் மூலம் எழுதும்பொழுது ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காணலாம்.

படங்களுக்குரிய எழுத்துகளைக் கண்டறிதல்

மாணவர்களை வட்டமாக அமரச் செய்து ஒரு வட்டத்தில் எழுத்துக்கள் உள்ள அட்டையைப் போட்டு விட வேண்டும்.  பின்னர் படத்தைக் காட்ட வேண்டும் படத்திற்கு உரிய எழுத்துக்களை மாணவர்கள் தேடி எடுத்து சேர்த்து வைக்க வேண்டும்.  இந்த விளையாட்டு மூலம் மாணவர்கள் எழுத்துக்களை அறியவும் இணைத்துச் சொல்லவும் அறிந்து கொள்வர்.

படத்தின் பெயரை எழுதுதல்:

படத்தைக் கொடுத்து அதன் பெயரை எழுதச் சொல்லும் போது படமும் அதன் பெயரும் நினைவில் எப்போதும் நிற்கும். இந்தப் பயிற்சி அளிப்பதன் மூலம் மாணவர்களின் நினைவாற்றல் திறனும், புரிதல் திறனும் மேம்படும்.

மேற்கண்ட பயிற்சிகள் எல்லாம் இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் குழந்தைகளுக்குப் பிடிக்கின்ற வகையில் மொபைல் செயலியில் வந்துள்ளது.  அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆர்வமுடன் கற்கின்றனர்.

என்னுடைய வகுப்பறையில் செயலி மூலம் தமிழ் கற்பித்த அனுபவங்கள்.

1. சொல்லி அடி(https://goo.gl/rN7cFY) :

சொல்லி அடி என்ற செயலியில் படம்பார்த்துக் கண்டுபிடி, சொல்லுக்குள் சொல், சொல் விளையாட்டு, எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி, இணைச்சொற்களைக் கண்டுபிடி, குறிப்புகள் மூலம் கண்டுபிடி போன்ற விளையாட்டுக்கள் இருந்தன.

இந்தச் செயலியின் மூலம் மாணவர்கள் சொல் உருவாக்கவும், எழுத்துக்களைச் சரியான முறையில் அடையாளம் காணவும் கற்றுக் கொண்டனர்.  மேலும் எதிர்ச்சொல் அறிதல், இணைச்சொற்கள் அறிதல் போன்றவற்றை ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர்.

2. சொல்லினம் செயலி(https://goo.gl/8gBZj4) :

சொல்லினம் செயலி மூலம் சொற்களை உருவாக்குவதற்குப் பயிற்சி அளித்தேன்.  இதன் மூலம் சொற்களை உருவாக்கவும், வாசிக்கவும் கற்றுக் கொண்டனர்.

3. மாயக்கட்டம் செயலி(https://goo.gl/VHKKQt) :

மாயக்கட்டம் செயலியும் சொல் உருவாக்குவதற்குப் பயன்படுகிறது.  மாணவர்கள் ஆர்வமுடன் விளையாட்டு மூலம் மாயக்கட்டத்தில் உள்ள எழுத்துக்களை வைத்து சரியானச் சொல்லை உருவாக்கினர்.

4. தமிழ் கற்போம் செயலி (https://goo.gl/FK5Hvb) :

தமிழ் கற்போம் செயலியில் உள்ள வீடியாக்கள் மூலம் வாய்மொழிப் பயிற்சியும், எழுத்துப் பயிற்சியும் வழங்கினேன்.  இதன் மூலம் மாணவர்கள் சரியான உச்சரிப்புப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் பெற்றனர்.

5. யோசி செயலி (https://goo.gl/Hb8MN3) :

யோசி செயலியில் விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், சிந்தனைகள், பாடல்கள் உள்ளன.  இவைகளில் மாணவர்கள் விடுகதைகள், புதிர் விளையாட்டுகளை ஆர்வமுடன் செய்தனர்.

முடிவுரை:

பொதுவாக தொடக்கநிலை மாணவர்களுக்குக் கற்பித்தலில் ஏற்படும் இடர்ப்பாடுகளை இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் எளிமையாக எதிர்கொண்டு களைய முடிகிறது.  இதன் மூலம்மாணவர்களின் கற்றல் திறனும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் மேம்படுகிறது.

Author: முனைவர் ப. இரமேஷ், உதவி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கருநிலம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்.

Subject: 
Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment