படம் பார்த்து விவரித்தல்:
பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள இயற்கைக் காட்சியை மாணவர்களிடம் உற்றுநோக்குமாறு கூறினேன். படத்தில் அவர்கள் பார்த்ததை வரிசையாகக் கூறினர். கூறுவதற்கு வாய்ப்பு வேண்டுவோர் கைகளை உயர்த்த வேண்டும் என்பது எங்கள் வகுப்பறை விதி. அதன்படி அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் கூறியவைகளை கரும்பலகையில் எழுதினேன். காடு, முயல், மீன், மரங்கள் என ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியமாகியது.
எ.கா. காடு
மாணவர் : இது ஒரு காடு.
ஆசிரியர் : அந்தக் காடு எவ்வாறு உள்ளது?
மாணவர்கள்: அழகாக; பசுமையாக; அடர்ந்த... என விவரித்து கூறினர்.
இவ்வாறு அவர்கள் விவரித்த வாக்கியங்கள் அனைவரின் ஒப்புதலுடன் கரும்பலகையில் எழுதினேன். ஒரு மாணவர், “மீன்கள் நீரில் துள்ளிக்குதிக்கிறது” எனக் கூறினான், மற்றவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு "துள்ளிக்குதிக்கின்றன" என மாற்றம் செய்து கரும்பலகையில் எழுதினேன். இவ்வாறாக படத்தில் அவர்கள் பார்க்கும் காட்சிகள், படத்தில் உள்ள செயல்கள், படத்தைப் பற்றி அவர்களின் கருத்து என விவரித்து எழுதுதல் தொடர்ந்தது. பிறகு, வரிசைப்படுத்தப்பட்டு அவர்களுடைய வகுப்புப்பாட நோட்டில் எழுத வைத்தேன்.
குழு செயல்பாடு: விவரித்து எழுதுதல்
மாணவர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் பாடப்புத்தகத்தில் உள்ள இயற்கைக் காட்சி படம் கொடுக்கப்பட்டது. முன்னதாக அந்தப் படத்தை விவரித்து கூறுமாறு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் பங்கு பெற்றனரா என்பதை உறுதி செய்தேன். வாய்மொழியாக கூறிய பிறகு குழுக்களில் கலந்துரையாடல் நடைபெற்றது. குழுவில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்கள் கருத்தைப் பகிர வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குழு உறுப்பினர்களின் கருத்துக்குச் செவிமடுக்க வேண்டும். பின்னர் விவரித்து எழுத வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் விவரித்தலும் கருத்துப் பகிர்வும் நடைபெறுகிறதா என்பது ஆசிரியரால் உறுதிபடுத்தப்பட்டது. பின்னர் குழுவிற்கு ஒரு வரைப்படத்தாள் கொடுக்கப்பட்டு மார்கரில் (marker pen) அவர்கள் விவரித்ததை எழுதினர். தனித்தனி வாக்கியமாக அல்லாமல் ஒரு பத்தியாக எழுதுகின்றனரா? முற்றுப்புள்ளி வைக்கின்றனரா? என்பதை ஆசிரியரால் உறுதி செய்யப்பட்டது.
ஆசிரியர் வடிவத்தோடு ஒப்பிடுதல் மற்றும் தொகுத்தல்
ஆசிரியரின் வடிவமும் தயார் செய்துகொண்டேன். குழு தயாரிப்பு முடிந்தவுடன் அவர்களின் படைப்புகள் ஆசிரியர் வடிவத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த ஒப்பீட்டில் மீண்டும் மீண்டும் வாசித்தல் நிகழ்கிறது. ஆசிரியர் வடிவத்தை வாசிக்கின்றார். பின்னர் மாணவர்கள் அதனுடன் ஒப்பிடுகின்றனர். இந்த ஒப்பீடு முடிந்தவுடன். (Editing) தொகுத்தல் நடைபெற்றது. சாதாரண வகுப்பறைபோல் ஆசிரியர் தன் சிவப்பு மையினால் எது தவறு என சுட்டிக்காட்டுவதாக இல்லாமல் மாணவர்கள் தாங்களாகவே தங்கள் படைப்புகளை மாற்றம் செய்கின்றனர். வாக்கிய பிழை, எழுத்துப்பிழை இலக்கணப் பிழை அன அனைத்தும் அவர்களாலேயே மாற்றம் செய்யப்படுகிறது. எந்த இடத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை அவர்களுக்குள்ளே கேட்டு மாற்றம் செய்தனர்.
நீக்கல், சேர்த்தல் என அனைத்தும் அவர்களே செய்தனர். இங்கும் மீண்டும் மீண்டும் வாசித்தல் நடைபெறுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு குழுவின் படைப்பும் மாற்றம் செய்யப்படுகிறது பின்னர் திருத்தப்பட்ட வடிவத்தை மாணவர்கள் தங்கள் வகுப்பறை சுவடியில் எழுதுகின்றனர். பின் அந்தப் படைப்பிற்குப் பொறுத்தமான படம் வரையப்பட்டு வண்ணமும் கொடுக்கப்படுகிறது. வரைதலும் வண்ணம் பூசுதலும் தனி மாணவர் செயல்பாடு. மாணவர்களின் படைப்புகளை குழுவாகவே வாசிக்க வைக்க வேண்டும். மெல்ல கற்கும் மாணவர்களிடம் வார்த்தைகளை அடையாளம் காட்டச் செய்தல், சிறு வாக்கியத்தைப் படிக்க வைத்தல், எழுத்தை அடையாளம் காட்டுதல் என தனிக்கவனம் செலுத்த முடிகிறது. இவ்வாறு ஒவ்வொரு குழுவிலும் வாசிக்க வைக்கப்பட்டது.
பின்னர் தொடர்பணியாக மாணவர்களே ஒரு படத்தைத் தேர்வு செய்து விவரித்து எழுதுமாறு கூறினேன்.
மாணவர்களுக்கு நம்பிக்கை கிடைக்கிறது. அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை வரவேற்கின்றனர். மற்றவர்களின் கருத்துக்களுக்கு செவிமடுக்கும் பண்பை பெறுகின்றனர். சிவப்பு மையினால் ஆசிரியர் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டும் வழக்கத்தில் இருந்து மாறுபட்ட ஒரு முறையாக இது இருக்கிறது. பிழை என்று எதுவும் சுட்டிக்காட்டப்படாமல் இருப்பதால் மாணவர்கள் பயம் இன்றி கருத்துளை வெளிப்படுத்துகின்றனர். படங்கள் மூலம் கற்பனைத் திறன் வலுப்பெறுகிறது.
Term: Term 1
- Log in or register to post comments