வகுப்பறைச் செயல்பாடுகள் மற்றும் பிரதிபலிப்புகள்
என்றும் பயில்பவராக ஆசிரியர்
ரோஷினி, அ .தொ . ப , பங்கூர்
மாணவர்களின் பலதரப்பட்ட தேவைகளை அறிந்து, அதனை நிறைவேற்றும் விதமாக ஆசிரியர் பல்வேறு கற்பித்தல் உத்திகளைக் கற்றுணர்ந்து செயல்படுதல் அவசியமாகிறது.
அனுதினமும் ஆசிரியர் கற்றுக்கொண்டே இருப்பது நல்லது
கடந்த 30ஆண்டுகளில் தொலைக்காட்சியினாலும், 10 ஆண்டுகளில் வலைத்தளங்கள் மற்றும் கைப்பேசியினாலும்; மாணவர்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகள் மேலோங்கி உள்ளன. இத்தகைய பலதரப்பட்ட சவாலானச் சூழலில், ஆசிரியராகிய நாமும், ஏதேனும் புதியவற்றைக் கற்கும் ஆர்வத்தோடு வரும் மாணவர்களுக்காகப் புதியவற்றைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.
எனது அனுபவம்
எனது பத்தாண்டுகால ஆசிரிய பணியில் முதல் வகுப்பு எடுப்பது இதுவே முதல்முறை. முதலில் தாளில் தமிழ் எழுத்துக்கள் எழுதும் பயிற்சி - கையெழுத்துப் பயிற்சி புத்தகத்தில் எழுதும் பயிற்சி அளித்தேன். ஏடுகளைத் திருத்தும் பொழுது சில எழுத்துக்கள் எழுதும் முறையை மாற்றி எழுதியதை உணர்ந்தேன். பிறகு ஒவ்வொரு எழுத்தையும் கவனமாகப் பார்த்து எழுத கற்றுக் கொடுத்தேன்.. ஆனால் மாணவர்களிடம் அதைக் கொண்டுவருவது சவாலாக இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு முதலில் கற்றுக் கொடுத்ததே ஆழமாகப் பதிந்து விட்டது.
அதை சரி செய்ய நான் கையாண்ட உத்திகள் -
உப்புத்தாளில் அந்த குறிப்பிட்ட எழுத்துக்களை வெட்டி(சரியான வடிவத்தில்) மாணவர்களை அதன் மேல் கையை வைத்து ஏடுகளில் எழுதச் சொன்னேன்.
பின், அறையில் உள்ள மாணவர்களுக்கானப் பயிற்சிக் கரும்பலகைகளில் அந்த எழுத்தை நான் எழுதி மாணவர்களை அதன் மேல் எழுதச் சொன்னேன். அதன்பின் கையெழுத்துப் பயிற்சி, ஏடுகளில் எழுதவைத்த பொழுது மாற்றத்தை உணர்தேன்.
இதன் மூலம், கற்பிக்கும் ஆசிரியர் எந்நாளும் பிழையறக் கற்பவராக இருக்க வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். நாம் தெரிந்து கொள்வது எதுவாயினும் கவனம் சிதறாமல் ஈடுபட வேண்டும்.